சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அணை கட்டு பாலத்திற்கருகே பொதுப்பணித்துறை அலுவலகம் இயங்கி வருகின்றது. இந்நிலையில் அணை கட்டுபாலத்தின் ஷட்டர்கள் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பழுதானதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை அகற்றிவிட்டு புதிய ஷட்டர்களை அமைத்தனர்.
அகற்றப்பட்ட அதிக எடை கொண்ட ஷட்டர்களை பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் போட்டுவைத்துள்ளதால் மழையில் நினைத்து சேதமடைந்து மண்ணோடு மண்ணாக மக்கி வருகின்றது. இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மழை, வெள்ள காலங்களில் அணைக்கட்டு பாலத்தின் ஷட்டரின் வழியே ஒரு லட்சம் கனஅடி வரை வெள்ளநீர் செல்லும்.
இதுபோன்ற சமயங்களில் சேதமான ஷட்டரால் அணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கருதி ஐந்தாண்டுகளுக்கு முன்பே பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஷட்டர்களை அகற்றி அலுவலக வளாகத்தில் போட்டுவிட்டனர். பழைய ஷட்டர்கள் மக்கி வீணாகுவதற்குள் மாவட்ட நிர்வாகம் விரைந்து ஆய்வு செய்து ஏலம்விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.