சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு செல்போன் மூலம் இதுவரை 100 பேர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக சென்னை காவல் ஆணையரிடம் அவரது ஆதரவாளர் புகார் தொடுத்துள்ளார்.இதுகுறித்து அவரது வழக்கறிஞர் பாலமுருகன், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ராஜ்ய சபா உறுப்பினர் சி.வி.சண்முகம், முன்னாள் சட்டத்துறை அமைச்சராகவும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினராக உள்ளார். சி.வி.சண்முகத்தின் அரசியல் செயல்பாட்டால் எரிச்சலடைந்தவர்கள், தொடர்ந்து, அவருக்கு தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும், கொலை மிரட்டல்கள் செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல்கள் ரவுடிகள் மற்றும் குண்டர்களிடம் இருந்து வந்துள்ளன. அதுதொடர்பாக ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரோசனை காவல் நிலையத்தில், புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.