காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை 24ம் தேதி காலை 10.30 மணிக்கு எனது தலைமையில் மாவட்ட வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான அறிவுரை மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கமளிக்க உள்ளனர். எனவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாது கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
கூட்டம் நடைபெறும் நாள் பிரதான் மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் இணைய வழி பதிவுகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பதிவு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன் பதிவு செய்யலாம். ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் நகல், நில வரை படம் நகல், ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 1, இணையவழி சிறு, குறு விவசாய சான்று, வங்கி கணக்கு புத்தகம் நகல், நிலத்தின் பரப்பளவு, பட்டா நகல்களை கொண்டு வரவேண்டும். கோவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் ஆதார் அட்டை நகலை காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.