கட்டாய திருமணம் செய்து மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது

திருவண்ணாமலை: கட்டாய திருமணம் செய்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் உறவினர் வீட்டில் தங்கியிருந்து திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார்.

அதைத்தொடர்ந்து, இவரது தாயின் வற்புறுத்தலின்பேரில், செஞ்சி அடுத்த பரதன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுதாகரன்(33) என்பவருக்கு, மாணவியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுதொடர்பாக, அந்த மாணவி சைல்டு ஹெல்ப் லைன் எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல் அளித்ததன்பேரில், திருமணத்தன்றே அந்த மாணவியை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுகாதாரனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, செஞ்சி மகளிர் போலீசில் நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த சுதாகரன், மாணவி தங்கியிருந்த உறவினர் வீட்டுக்கு சென்று மிரட்டல் விடுத்துள்ளார். தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால், கொலை செய்துவிடுவதாக மிரட்டினாராம்.

அதைத்தொடர்ந்து கடந்த 13ம்தேதி மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவியை, கீழ்பென்னாத்தூர்-ராயம்பேட்டை சாலையில் வழிமறித்த சுதாகரன், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அப்போது, மாணவி கூச்சலிட்டதால் அவரது கையை பிளேடால் கிழித்துவிட்டு தப்பியுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை மகளிர் போலீசில் மாணவி அளித்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோமளவள்ளி வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சுகாதாரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: