கடும் பொருளாதார நெருக்கடியால் வாழ வழியின்றி இலங்கை தமிழர் 7 பேர் தனுஷ்கோடிக்கு வருகை: தங்கநகைகளை படகுக்கு கட்டணமாக கொடுத்து வந்த சோகம்

ராமேஸ்வரம்: இலங்கை தமிழர்கள் 7 பேர் நேற்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு படகில் வந்து சேர்ந்தனர். இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் வருவாயின்றி மக்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் கடற்படை கண்காணிப்பையும் மீறி கடல் வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வருகின்றனர்.

இலங்கை, வவுனியா திருநாவகுளம் பகுதியை சேர்ந்த தஸ்நேவிஸ் (40), இவரது மனைவி ரஜினி (39), குழந்தைகள் ஜோஸ்வா (12), ஏஞ்சல் (11), அன்சிகா (5), இலங்கை திரிகோணமலை நிலவளி பகுதியை சேர்ந்த மேத்யா (40), இவரது மகன் சந்தனு (7) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தலைமன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் நேற்று அதிகாலை வந்திறங்கினர். இவர்களை இறக்கிவிட்ட படகு திரும்ப சென்றுவிட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலீசார் இலங்கை தமிழர்கள் 7 பேரையும் விசாரணைக்கு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

முதற்கட்ட விசாரணையில், வருவாய் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டதால் அகதிகளாக வந்ததாகவும், தங்க நகைகளை படகுக்கு கட்டணமாக கொடுத்து தனுஷ்கோடி வந்ததாகவும் தெரிவித்தனர். இவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: