மாங்காடு அருகே பைக்கில் எடுத்து வந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து ரவுடி படுகாயம்: யாரையாவது கொல்ல திட்டமா? போலீஸ் விசாரணை

குன்றத்தூர்: மாங்காடு அருகே நாட்டு வெடிகுண்டு கீழே தவறி விழுந்து வெடித்ததில் ரவுடி படுகாயம் அடைந்தார். அவருடன் பைக்கில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  

மாங்காடு அருகே பரணிபுத்தூர் 4 சாலை சந்திப்பில் நேற்றிரவு ஒரு பைக்கில் 3 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் கையில் வைத்திருந்த பையிலிருந்து ஒரு மர்ம பொருள் கீழே விழுந்து வெடித்தது. இதை கேட்டதும் அக்கம்பக்கத்தினர் சிதறி ஓடினர். இச்சந்தர்ப்பத்தில் பைக்கில் வந்த 3 பேரும் தப்பி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும் மாங்காடு போலீசார் விரைந்து வந்து ஆய்வு செய்து விசாரித்தனர்.

 

முதல் கட்ட விசாரணையில், பையிலிருந்து கீழே விழுந்த பொருள் நாட்டு வெடிகுண்டு என்பதும், அது வெடித்து சிதறியதில் அருகில் உள்ள ஓட்டல் மற்றும் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியதும் தெரியவந்தது. இதற்கிடையே, சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஒருவர் காலில் படுகாயங்களுடன் கிடப்பதாக தெரியவந்தது. அங்கு போலீசார் விரைந்து சென்று, படுகாயம் அடைந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் பூந்தமல்லி அருகே ஐயப்பன்தாங்கலை சேர்ந்த ரவுடி வினோத்குமார் (27) என்பதும், அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனத் தெரியவந்தது. மேலும், அவர் தனது நண்பர்களுடன் பைக்கில் எடுத்து சென்ற நாட்டு வெடிகுண்டு கீழே விழுந்து வெடித்ததில் படுகாயம் அடைந்ததாகவும் தெரியவந்தது. ரவுடி வினோத்குமாரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, யாரையாவது பழிதீர்க்க நாட்டு வெடிகுண்டு எடுத்து சென்றார்களா அல்லது விற்பனை செய்கிறார்களா என பல்வேறு கோணங்களில் ரவுடி வினோத்குமாரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: