வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமை சரணுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க முயற்சி மேற்கொண்டு, கிராமங்கள் தோறும் இளைஞர்களை திரட்டி பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்தி வரும் வாலாஜாபாத் அடுத்த நத்தாநல்லூரை சேர்ந்தவர் பசுமை சரண். இவருக்கு, தமிழக அரசின் 2021ம் ஆண்டுக்கான பசுமை முதன்மையாளர் விருது, ரூ 1 லட்சத்துக்கான காசோலையை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கி கௌரவித்தார். இதனையடுத்து, வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் பாராட்டு விழா அகத்தியா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு அதன் தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார், செயலாளர் மோகனகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் காஞ்சி அமுதன் கலந்து கொண்டு பசுமை சரணுக்கு பாராட்டு பத்திரமும், பரிசும் வழங்கி கவுரவித்தார்.இதில், வாலாஜாபாத் பேரூராட்சி கவுன்சிலர் வெங்கடேசன், அரிமா சசிகுமார், சீனிவாசன், செந்தில், சேஷாத்ரி, தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் வெங்கடேசன் உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து வாழ்த்து தெரிவித்தனர்.