திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை வரும் 16-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பழனி மலையில் 18 சித்தர்களில் ஒருவரான போகரால் நவபாஷாணத்தை கொண்டு செய்யப்பட்ட முருகன் சிலை கோவில் மூலவராக உள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி கோவிலில் முருகன் ஆண்டி கோலத்தில் காட்சியளிக்கிறார். பழனி மலை கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வர ரோப்கார், வின்ச் ஆகிய வசதிகள் உள்ளன.