காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மகன்கள் வயதான காலத்தில் தன்னை சரியாக கவனிக்கவில்லை என தாய் கண்ணீர் மல்க புகார் அளித்தார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. இதில், செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 65 வயதான மூதாட்டி மலர்விழி கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார். அம்மனுவில், காஞ்சிபுரம் வட்டம் செம்பரம்பாக்கம் கிராமத்தில் எனது கணவனுடன் வாழ்ந்து வந்தநிலையில் கணவரின் இறப்புக்குப் பின் தனது குடும்ப சொத்துக்களை எனது இரு மகன்கள், ஒரு மகள் மற்றும் எனக்கும் சேர வேண்டியது என ஒரு வீட்டுமனை மற்றும் ஏழு ஏக்கர் நிலங்களை கூட்டாக எழுதி வைத்திருந்தார்.மேலும், தனது 25 சவரன் நகையை எனது மகன் வாங்கி வைத்துக்கொண்டு எனது தாய் வழி சொத்தையும் எழுதி வாங்கிக்கொண்டு எனக்கும் எனது மகளுக்கும் தராமல் அலைக்கழித்து வருகிறார்.