மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம்; சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து 20, 21ம் தேதி மக்கள் கருத்து கேட்பு.! இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த இந்து சமய அறநிலையத்துறை 5 பேர் கொண்ட குழுவை நியமித்திருந்தது. இந்த குழு கடந்த 7, 8ம் தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது தீட்சிதர்கள் கணக்குகளை காட்டவில்லை. குழுவிற்கு தேவையான ஒத்துழைப்பையும் அளிக்கவில்லை. இதையடுத்து ஆய்வுக் குழுவினர் திரும்பி சென்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை ஒரு புதிய பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், சிதம்பரம் சபாநாயகர் (நடராஜர்) திருக்கோயில் குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலைய அறக்கொடைகள் சட்டப்பிரிவு 23 மற்றும் 33ன் படி ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் திருக்கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என்றும், வருகிற 20ம் தேதி மற்றும் 21ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கடலூர் புதுப்பாளையம் ஆற்றங்கரை தெருவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அஞ்சல் மூலமாகவும், vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் கருத்துக்களை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடராஜர் கோயில் ஆய்வுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்காத நிலையில், திருக்கோயில் நலனில் அக்கறை உள்ளவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories: