துபாய்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மரணம் அடைந்ததாக தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இத்தகவலை மறுத்த அவரது குடும்பத்தினர், முஷாரப் உடல் நிலை மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக கூறினர்.பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப், கடந்த 1999ம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து அதிபரானார். இவர் 2001ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தார். அதைத் தொடர்ந்து, மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, தேர்தலில் படுதோல்வி அடைந்து 2008ல் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, முஷாரப் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதுதொடர்பாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே, கடந்த 2016ம் ஆண்டு முஷாரப்புக்கு ‘அமிலாய்டோசிஸ்’ என்னும் அரிய வகை நோய் பாதித்தது.இதனால் மருத்துவ சிகிச்சைக்காக, நீதிமன்ற அனுமதியுடன் துபாய் சென்ற அவர் பின்னர் நாடு திரும்பவில்லை. துபாயை தொடர்ந்து லண்டனில் சில காலம் சிகிச்சை பெற்ற முஷாரப்பின் உடல் நிலை மீண்டும் மோசமடைந்தது. இதனால், மீண்டும் துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். படுத்த படுக்கையான முஷாரப்புக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.