திருவிழாவிற்கு தாய் வீடு சென்றபோது சோகம் காதல் மனைவியை துப்பட்டாவால் கழுத்து இறுக்கி கொன்ற கணவன்: உறவினர்கள் சரமாரி அடித்து உதைத்தனர்; ஆம்பூர் அருகே அதிகாலையில் பரபரப்பு

ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் குடும்ப தகராறில் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவனை உறவினர்கள் சரமாரி அடித்து உதைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகள் நந்தினி(27). வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பங்களாமேட்டை சேர்ந்தவர் விக்னேஷ்(32). இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஷூ கம்பெனியில் வேலை செய்தபோது காதலித்தனர். ஒரு வருட காதலுக்கு பின்னர் இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இதை தொடந்து நந்தினி தனது கணவருடன் பேரணாம்பட்டு அடுத்த பங்களா மேட்டில் வசித்து வந்தார். தற்போது விக்னேஷ் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தம்பதியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நந்தினி தேவலாபுரம் கோயில் திருவிழாவுக்காக கணவர் மற்றும் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்தார். அங்கு நள்ளிரவு தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று அதிகாலை மற்றவர்கள் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுவிட, விக்னேஷ், மனைவி நந்தினி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ், நந்தினியின் சுடிதார் துப்பட்டாவை பறித்து அவரது கழுத்தில் இறுக்கி கொலை செய்துள்ளார். வீடு திரும்பியவர்கள்,  நந்தினி இறந்து கிடப்பதை கண்டு விக்னேஷை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவலறிந்து ஆம்பூர் போலீசார் விரைந்து வந்து காயமடைந்த விக்னேஷை மீட்டு ஆம்பூர் அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். நந்தினியின் தந்தை செல்வராஜ்  புகாரின்பேரில் வழக்குப்பதிந்து விக்னேஷை கைது செய்தனர்.

Related Stories: