ஆம்பூரில் அதிகாலை காரில் திடீர் தீ: 2 பேர் தப்பினர்

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பூந்தோட்டம் பர்ணகார தெருவை சேர்ந்தவர் சபியுல்லா (56). கார் வியாபாரி. இவர், தனது காரில் சென்னைக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை ஊருக்கு திரும்பினார். காரை அவரது டிரைவர் ஆம்பூர் புதுமனை ஆயிஷாபீ நகரை சேர்ந்த நவாஸ் (26) என்பவர் ஓட்டினார். ஆம்பூர் அடுத்த கொம்மேஸ்வரம் அருகே வந்தபோது திடீரென கார் பழுதானது. இதனால் சபியுல்லா, அவ்வழியாக வந்த மற்றொரு காரில் வீடு திரும்பினார்.

இதையடுத்து பழுது பார்ப்பதற்காக காரை நவாஸ் மற்றும் அங்கு வந்த தனது நண்பர் ஒருவருடன் கன்னிகாபுரத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. அதிர்ச்சியடைந்த இருவரும் காரில் இருந்து வெளியேறினர். அதற்குள் கார் தீப்பற்றி எரிந்து கருகியது. இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: