வரி ஏய்ப்பு புகார்!: தமிழகத்தில் ஆர்த்தி ஸ்கேன்ஸ் மையங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு..!!

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் உள்ள ஆர்த்தி ஸ்கேன்ஸ் மையங்கள் மற்றும் அதற்கு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்பட 9 மாநிலங்களில் 45 கிளைகளுடன் ஆர்த்தி ஸ்கேன்ஸ் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் நேற்று சென்னை வடபழனி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆர்த்தி ஸ்கேன்ஸ் மையங்களில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். மேலும் அண்ணாநகரில் உள்ள அந்நிறுவனத்தின் நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அதில் பணிபுரியும் மருத்துவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

சென்னை, திருச்சி, மதுரை, நெல்லையை சேர்ந்த சுமார் 200 அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். இதில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேவைப்பட்டால் மேலும் 2 நாட்கள் சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், இன்று 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத ரொக்கம் குறித்து சோதனையின் முடிவில் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: