பூந்தமல்லி: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சென்னையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிர தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து திருவேற்காடு நகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காட்சியை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், திடக்கழிவுகளை முறையாக பிரித்து வழங்கும் மக்களுக்கு தள்ளுபடி விற்பனையில் பொருட்கள் பெறுவதற்கான அட்டைகள் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் நாசர் பேருந்து நிலையம், சன்னதி தெருக்களில் கைகளால் குப்பைகளை அள்ளி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.