வியாசர்பாடியில் கஞ்சா விற்ற ரவுடி சிறையிலடைப்பு

பெரம்பூர்: வியாசர்பாடியில் கஞ்சா விற்பனை செய்த ரவுடி கைது செய்யப்பட்டார். சென்னை எம்கேபி நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரு மர்ம நபர், கஞ்சா விற்பதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்றிரவு வியாசர்பாடி சர்மா நகர் தொழிற்பட்டை அருகே எம்கேபி நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர்.

அவரிடம் 400 கிராம் கஞ்சா இருந்தது. அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில், வியாசர்பாடி பி.வி.காலனி 29வது தெருவை சேர்ந்த தினகரன் (எ) தீனா என்பதும் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இவர் மீது வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் வழக்கு பதிந்து தினகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Related Stories: