பள்ளி திறப்பின்போது வழங்குவதற்காக அடுத்த கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் தயார்-அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு  அடுத்த கல்வி ஆண்டிற்கான இலவச பாடப் புத்தகம் தற்போது வரப்பெற்று தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளில் படித்த மாணவ,மாணவிகளுக்கான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்1, பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடையும் நிலையில் உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  ஒன்று முதல் முதல் 9ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான இறுதி தேர்வு, கடந்த 13ம் தேதி வரை நடந்தது.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 1ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு நடப்பு கல்வியாண்டில்(2022-2023) வழங்கப்பட வேண்டிய இலவச பாடப்புத்தகங்கள் அனைத்தும், தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் அச்சிடப்பட்டு, அந்தந்த கல்வி மாவட்டம் வாரியாக வினியோகிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

இதில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, நகராட்சி பள்ளி, சுயநிதிபள்ளி, ஆதிதிராவிட நல பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்க உள்ள மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுவதற்காக, அனைத்து  பாடத் திட்டங்களுக்குரிய புதிய புத்தகங்கள் வரப்பெற்றுள்ளது. அவை, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் நேதாஜி ரோடு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிகளில்  உள்ள தனித்தனி அறைகளில்  பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

அதுபோல், ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட துவக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் அந்தந்த ஒன்றிய வட்டார கல்வி அலுவலகத்திற்கு வரப்பெற்றுள்ளது. கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் வால்பாறை தாலுகாவிற்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தனித்தனியாக, ஜூன் மாதம் துவக்கத்தில்  வழங்கப்பட்டு. பின் பள்ளி திறப்பு முதல் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகம் வழங்கப்படும் என, கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: