மயிலாடுதுறை அருகே அகர ஆதனூரில் புற்றடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன்

குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட அகர ஆதனூர் கிராமத்தில் உள்ள புற்றடி மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 6ம் தேதி பூச்சொரிதலுடன் காப்பு கட்டி விழா துவங்கியது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு கிராமவாசிகளால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. 15ம் நாள் திருவிழாவான தீமிதி திருவிழாவை முன்னிட்டு பெரிய குளக்கரையிலிருந்து மேள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் புறப்பட்டு ஆலயம் வந்தடைந்தது. தொடர்ந்து ஆலயம் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் சக்திகரகம் இறங்கியது.

தொடர்ந்து மஞ்சள் உடை உடுத்தி காப்பு கட்டி விரதம் இருந்த பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பெண்கள் மாவிளக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories: