உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்களுக்கு பாராட்டு விழா

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்களுக்கு பாராட்டு விழா சென்னை பெரியார் திடலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் நாசே ஜெ.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சட்டீஸ்கர் மாநில பிலாஸ்பூர்  மாநகர மேயர் ராம் சரண் யாதவ், மத்திய பிரதேச மாநிலம் பட்ராவாஸ் மாநகர துணை மேயர் பூபேந்திர சிங் யாதவ், சென்னை மாநகர துணை மேயர் மகேஷ்குமார், நெல்லை துணை மேயர் ராஜி மற்றும் அனைத்து மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், நகர்மன்ற தலைவர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், ஊராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். மாநில பொருளாளர் எத்திராஜ் நன்றி தெரிவித்தார்.

விழாவில், நாசே ஜெ.ராமச்சந்திரன் பேசியதாவது: விரைவில் கோபாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அகாடமி ஏற்படுத்தப்பட்டு முதற்கட்டமாக 60 யாதவ சமுதாய மாணவ, மாணவிகளுக்கு  தங்கும் இடத்துடன் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள யாதவ கல்வி நிறுவனங்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி பயில இலவசமாக ஏற்பாடு செய்யப்படும். வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து அந்தந்த மாவட்டங்களில் இலவச சட்ட உதவி மையம் ஏற்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

வெளிநாடுகளில் பணிக்கு செல்ல விருப்பம் உள்ளவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பு கிடைத்திட தகுந்த வழிகாட்டுதல் தமிழ்நாடு யாதவ மகா சபை மூலம் ஏற்பாடு செய்யப்படும். நீண்டநாள் கோரிக்கையான ஆடு வளர்ப்போர் வாரியம் அமைத்து, அதற்கு யாதவர் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும். வனப்பகுதியில் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பிருந்த நிலைப்பாடு தொடர்வதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் தொகை உள்ள யாதவ சமூகத்திற்கு அடுத்து வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் அதிகமாக போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: