டெல்லி : இந்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77.73ஆக சரிந்துள்ளது. கடந்த 10 வர்த்தக நாட்களில் தொடர்ந்து 5 முறை ரூபாயின் மதிப்பு உச்சபட்சமாக வீழ்ச்சி அடைந்து கொண்டே வந்துள்ளதால் பொருளாதார நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77.61 காசுகளாக சரிந்தது. இன்று மேலும் 12 காசுகள் சரிந்துள்ளது. நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எரிபொருள் விலை உயர்வால் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதனால் பணவீக்க விகிதம் அதிகரித்து., கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த பணவீக்கம் விதிகம் 7.79% ஆக பதிவானது. மார்ச் மாதத்தில் பணவீக்க விகிதம் 6.95% ஆக இருந்தது. பொதுவாக ரிசர்வ் வங்கியால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகபட்ச பணவீக்க விகிதம் 6% ஆகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்க விகிதம் 0.84% அதிகரித்துள்ளது. தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து, ரூபாயின் மதிப்பு வேகமாக சரிவை கண்டு வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் ரெப்போ வட்டி விகிதம் 4 ஆண்டுகளுக்கு பின்னர் 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டன.