அண்ணாநகர்: நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க தலைமுடியை மாற்றி வெட்டிக்கொண்டு சுற்றியது தெரியவந்துள்ளது. சென்னையில் ஒரு வாலிபர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் பிறந்தநாள் கொண்டாடியது சமூகவலைதளத்தில் பரவியது. இதை பார்த்த போலீஸ் உயரதிகாரிகள், அந்த வீடியோ வெளியிட்ட நபர்களை பற்றி விசாரிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து திருமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீடியோ சென்னை பழைய திருமங்கலம் பகுதியில் இருந்து வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆணையர் வரதராஜன், ஆய்வாளர் சிபுகுமார் தலைமையில் போலீசார் அந்த நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.