திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டி அழிப்பு: தடுக்க கோரிக்கை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பனை மரங்கள் வெட்டி அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பனையிலிருந்து கிடைக்கும் நுங்கு, பதநீர், பனை வெல்லம், பனங்கிழங்கு போன்றவை உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருள்களாக விளங்குகின்றன. பனை ஓலைகள் கூரை வேயவும், பல்வேறு கைவினைப் பொருள்கள் தயாரிக்கவும், முதிர்ந்த பனை மரங்கள் மரச்சட்டங்கள் செய்யப் பயன்படுகின்றன.

பல்வேறு பயன்களைத் தரும் பனையானது கற்பக விருட்சம் என அழைக்கப்படுகிறது. பனை மரமானது 100 அடி உயரம் வளர்ந்து 100 ஆண்டு காலம் வாழும் தன்மையுடையது. இதன் வேரானது பக்கவாட்டில் செல்லாமல் நேராக பூமிக்கடியில் செல்வதுடன் நிலத்தடி நீரையும் சேமிக்கும் தன்மை கொண்டது. இப்படி பல்வேறு பயனுள்ள பனை மரங்களை சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் அனுமதி இல்லாமல் வெட்டக்கூடாது என தமிழக அரசு தடைவிதித்ததுள்ளது மட்டுமின்றி பனை விதைகளை வழங்கியும் ஊக்குவித்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை நாச்சிக்குளம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ள நிலையில் நன்னிலம் அருகேயுள்ள நெடுஞ்சேரி சாலையில் 10க்கும் மேற்பட்ட பனை மரங்களில் கதண்டு வண்டுகள் இருப்பதாக கூறி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. மேலும் நீடாமங்கலம் ஆதனூர்- வடுவூர் சாலையில் முன்னாவல்கோட்டை பகுதியில் பனை மரங்களுக்கு மர்ம நபர்கள் திராவகம் ஊற்றியும் அழித்துள்ளனர். அதே போன்று லெட்சுமாங்குடி அருகே பனங்காட்டாங்குடி சாலையிலும் பனை மரங்கள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அடியோடு பெயர்த்து எறியப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தான் இவ்வாறு பனை மரங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. பனை மரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் ஊராட்சிதோறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திட வேண்டும். வயல் வரப்புகளில் உள்ள பனை மரங்களை அசடு எடுத்து சுத்தம் செய்து தர தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதுடன் பனை மரங்களின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு கிராமங்கள் தோறும் வழங்கிட வேண்டும்.

பனை மரங்களை வளர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பனை மரங்கள் அழிக்கப்படுவதை கண்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். பனை மரங்களை காக்க தொடங்கப்பட்ட தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம் அழிக்கப்படும் பனை மரங்களை காக்க முன்வர வேண்டும். இவ்வாறு ராஜவேலு தெரிவித்துள்ளார்.

Related Stories: