தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துக்கான ஒப்பந்தம் ஏற்படுத்தும் போது ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால் அந்த மாநிலத்தில் நுழையும் மற்றொரு மாநில பேருந்துகளில் கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது ஒப்பந்த விதி. அவ்வாறு தான் உரிமம் வழங்கப்படும்.

கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட சூழலில் அந்த மாநிலங்களுக்குள் செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தை சார்ந்த பேருந்துகளில் அந்த மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும். இந்த அட்டவணையை தவறாக புரிந்துகொண்டு தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகி விட்டது என்று தவறான செய்தி பரப்பப்படுகிறது. நிதி நெருக்கடியில் இருந்தாலும் முதலமைச்சர் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற மகத்தான திட்டத்தை வழங்கி அது சிறப்புற செயல்படுத்தப்படுகிறதா என்று தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இன்று வரை கடந்த ஓராண்டில் 112 கோடி இலவச பயணங்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கான நிதியை முதலமைச்சர் வழங்கி வருகிறார். இதுபோன்று, ஏழை, எளிய மக்களுக்கு பாதிக்காத வண்ணம் கட்டண உயர்வில்லாமல் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயங்கி வரும் சூழலில் ‘கட்டண உயர்வு அட்டவணை தயாராகிவிட்டது’ என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: