திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை துறையினர் நூல் விலை உயர்வைக் கண்டித்து 2 நாள் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலில், நிட்டிங், ரைசிங், காம்பாக்டிங், டையிங், பிரிண்டிங், எம்பிராய்டரிங் என 55 தொழில் அமைப்புகள் உள்ளன. இந்திய பருத்தி கழகம், பருத்தி பஞ்சு வர்த்தகத்தை வரன்முறை செய்யாததால் தொடர்பில்லாத நிறுவனங்களில் லட்சக்கணக்கான பேல்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பஞ்சு விலை அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பஞ்சு விலை ஒரு கேண்டி (356 கிலோ) ஒரு லட்சம் ரூபாயை கடந்துள்ளது. வரலாறு காணாத பஞ்சு விலையால் தமிழக நூற்பாலைகளும் அனைத்து ரக நூல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. கடந்த மாதம் கிலோவுக்கு ரூ.30 உயர்த்தப்பட்ட நிலையில், இம்மாதம் மீண்டும் ரூ.40 உயர்த்தப்பட்டது.