விழுப்புரம்: விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியில் ரூ.1.5 கோடி கடன் வழங்குவதில் அதிமுக தலைவர், இயக்குநர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் தங்கசேகர் தலைமையில் நடந்தது. இயக்குநர்கள் தனுசு, கலைச்செல்வன், செந்தில் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில், கடன் கேட்டு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு ரூ.1.50 கோடி வழங்குவது உள்ளிட்ட தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கூட்டம் தொடங்கிய நிலையில், அதிமுகவை சேர்ந்த தலைவர் தங்கசேகர், அதிகாரிகள் யாரும் தன்னை மதிப்பதில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தார். அதேசமயம், தலைவருக்கு எதிராக அதிமுகவை சேர்ந்த 7 இயக்குநர்கள் அந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டு நிறைவேற்றினர். பெரும்பான்மையான இயக்குநர்கள் கையெழுத்திட்டதால் தீர்மானம் நிறைவேறிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்களுக்கு ஓரிருநாளில் கடன் வழங்கப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.