கீழ்வேளூர்: நாகை, கீழ்வேளூர் அருகே காருகுடி பள்ளியில் மது போதையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த வலிவலம் ஊராட்சி காருகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 6 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என 8 பேர் மட்டுமே பயின்று வருகின்றனர். இரு ஆசிரியர்கள் கொண்ட பள்ளியில் வேதாரண்யம் அடுத்துள்ள தகட்டூரை சேர்ந்த தமிழ்செல்வன்(58) தலைமையாசிரியராகவும், ஆசிரியராக தேவகி(47) என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மது போதையில் பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வீட்டில் தெரிவித்தால் குளத்தில் தள்ளி கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.