புதுடெல்லி: ‘மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன்’ என்ற பிரசாந்த் கிஷோர் கூறி இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணிபுரிந்துள்ளார். பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தி வந்தார். வரும் 2024ம் ஆண்டு நடக்க உள்ள மக்களவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து சோனியாவுடன் ஆலோசித்து வந்தார். இதற்காக பிரசாந்த் கிஷோர் பல முறை சோனியாவை சந்தித்து பேசினார். இதனால் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று பேசப்பட்டது. ஆனால், காங்கிரஸ் விடுத்த அழைப்பை ஏற்க பிரசாந்த் கிஷோர் மறுத்து விட்டார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோரின் நேற்றைய டிவிட்டர் பதிவை தொடர்ந்து, அவர் புதிய கட்சி தொடங்குகிறாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.