ஜப்பானில் அடுத்த மாதம் நடக்கும் குவாட் உச்சி மாநாட்டில் பைடன்-மோடி சந்திப்பு

வாஷிங்டன்: ஜப்பானின் டோக்கியோ நகரில் அடுத்த மாதம் (மே) குவாட் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கின்றன. மே 20 முதல் 24 வரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்கிறார்.  இதனை முன்னிட்டு வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் சாகி வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார். இதில், இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார்.  இந்தோ-பசிபிக் பகுதியில் ஒரு வெளிப்படையான மற்றும் திறந்த நிலையிலான பைடன்-ஹாரிஸ் அரசின் உறுதியான ஈடுபாட்டை முன்னேற்றம் அடைய செய்யும் வகையில் இந்த சுற்றுப்பயணம் அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் மற்றும் ஜப்பான் பிரதமர் கிஷிடா புமியோ ஆகியோருடனும் பைடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாகி கூறுகையில், ‘தலைவர்களுடனான இந்த சந்திப்பில், நம்முடைய முக்கிய பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தவும், பொருளாதார உறவுகளை மேம்படுத்தவும், நடைமுறை முடிவுகளை எடுப்பதற்கான நம்முடைய நெருங்கிய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் உரிய வாய்ப்புகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக டோக்கியோவில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய குவாட் குழுவின் தலைவர்களையும் பைடன் சந்திப்பார்.  இந்த பயணம் பற்றிய கூடுதல் விவரங்களை விரைவில் பகிர்ந்து கொள்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: