ஈரோடு : ரம்ஜான் பண்டிகையையொட்டி ஈரோடு ஜவுளி சந்தையில் நேற்று வியாபாரம் அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கமாகும். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு கடந்த சில வாரங்களாக வியாபாரம் மிகவும் மந்த நிலையில் இருந்து வந்தது. மொத்த வியாபாரம் முற்றிலும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று நடைபெற்ற ஜவுளி சந்தை களை கட்டி காணப்பட்டது. குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடக போன்ற வெளிமாநிலங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் அதிக அளவில் ஜவுளி சந்தைக்கு வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்தனர். இதே போல சில்லரை விற்பனையும் அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.