சகோதரர்கள் இடையே அதிகார போட்டி லாலுவின் மூத்த மகனை நிர்வாணப்படுத்தி பிணைக் கைதியாக வைத்துள்ளனரா?: மூத்த நிர்வாகி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

பாட்னா: லாலுவின் மூத்த மகனை நிர்வாணப்படுத்தி பிணைக் கைதியாக வைத்துள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகி வெளியிட்ட வீடியோவால் பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவ் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘விரைவில் எனது தந்தையை சந்திக்க உள்ளேன். அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருகிறேன். கட்சித் தொண்டர்களையும் மதிக்கிறேன். விரைவில் கட்சிப் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று மதியம் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் பாட்னா தலைவர் ராம்ராஜ் யாதவ் வெளியிட்ட வீடியோவில்,  ‘முன்னாள் முதல்வர் ரப்ரி தேவியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தேஜ் பிரதாப் பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ளார். அவரை நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை இப்தார் விருந்து நடந்த போது, அவரை ஒரு அறைக்குள் வைத்து பூட்டினர். தேஜ் பிரதாப்பின் இளைய சகோதரர் தேஜஸ்வி யாதவ் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் ஜக்தானந்த் சிங் ஆகியோர்தான் காரணம். தலைவர் லாலுவும், இவ்விசயத்தில் தலையிடவில்லை’ என்று கூறிவிட்டு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இவர் வெளியிட்ட வீடியோவை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் தேஜ் பிரதாப் தான் கட்சியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். உண்மையில், லாலுவின் இரண்டு மகன்களான தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி இடையே அதிகாரப் போட்டி நீண்ட காலமாக நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டு சகோதரர்களுக்கு இடையே மீண்டும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இவ்விவகாரம் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் மட்டுமின்றி, மாநில அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: