ராமேஸ்வரம்: இலங்கை மன்னார் கடற்பகுதியில் இருந்து குழந்தைகளுடன் தனுஷ்கோடிக்கு படகில் வரமுயன்ற இலங்கை தமிழர்கள், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை மன்னார் கடல் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 7 தமிழர்கள் நேற்று முன்தினம் மாலை படகு மூலம் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வர முயன்றனர். பேசாளை கடற்கரை பகுதியில் படகில் ஏறி பயணம் செய்ய முயன்ற அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணை செய்த பேசாளை போலீசார் சிறுவர்கள் தவிர்த்து பெரியவர்கள் மூவரையும் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஹைபதுல்லா, இரண்டு பெண் உட்பட 3 பேருக்கும் தலா ₹50 ஆயிரம் அபராதம் விதித்து ஜாமீனில் செல்ல உத்தரவிட்டார். மேலும் அவர்களின் குழந்தைகள் நால்வரையும் பெற்றோருடன் இருப்பதற்கும் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.