சென்னை: தமிழகத்தில் பல்கலைக்கழக வேந்தராக கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளார். மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை அவர்தான் நியமனம் செய்து வருகிறார். வழக்கமாக அரசு பரிந்துரை செய்கிறவர்களில் இருந்து ஒருவரை கவர்னர் தேர்வு செய்வார். ஆனால் பன்வாரிலால் புரோகித் கவர்னரான பிறகு இந்த வழக்கம் அதிமுக ஆட்சிக் காலத்தில் மாற்றப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து கவர்னரே தன்னிச்சையாக துணை வேந்தர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார். அதைத் தொடர்ந்து அடிக்கடி கவர்னர் மாளிகை மற்றும் வீடியோ கான்பரன்சிங்கில் துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். மேலும் அனைத்து பட்டமளிப்பு விழாக்களிலும் அவர் கலந்து கொண்டு வருகிறார். இந்தநிலையில், 2047ல் இந்தியா உலக தலைமை ஏற்கும் என்ற பெயரில் ஊட்டியில் கருத்தரங்கு ஒன்றினை நடத்த கவர்னர் மாளிகை ஏற்பாடு செய்துள்ளது.