தரங்கம்பாடி: தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டையை உலக மரபு சின்னங்கள் வார விழாவையொட்டி ஒரு வாரம் இலவசமாக பார்வையிடலாம் என்று தொல்லியல்துறை அறிவித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை இன்றளவும் பாதுகாக்கபட்டு இந்திய-டேனிஷ் கலாசாரத்தை பறைசாற்றி வருகிறது. டேனீஷ் நேவி கேப்டன் ரோலண்டு கிராப் தரங்கம்பாடியையும் அதன் சுற்றுபுறத்தையும் தஞ்சை மன்னரிடம் விலைக்கு வாங்கி கி.பி.1620ல் தரங்கம்பாடி கடற்கரையில் டேனீஷ் கோட்டையையும் அதை சுற்றி மதில் சுவர்களையும் எழுப்பி நுழைவாயிலையும் கட்டினார். அந்த டேனிஷ் கோட்டை தடிமமான சுவர்களால் மிகவும் வலுவாக கட்டப்பட்டது. டேனிஷ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் டேனிஷ் கிழக்கிந்திய வர்த்த கம்பெனியின் நிர்வாக மையமாக விளங்கி வந்தது. கோட்டையின் மேல் தளத்தில் டேனிஷ் ஆளுநர் டேனிஷ் தளபதி வர்த்தக நிறுவனத்தின் அதிகாரிகள், அலுவலர்கள் தங்கி பணிகளை செய்து வந்தனர். கோட்டையின் கீழ்தளத்தில் பண்டக வைப்பறை, கிடங்கு, பீர் மற்றும் ஒயின் அறை, சமையல் பொருளுக்கான அறை, சமையலறை, கோழி வளர்க்கும் அறை, வீரர்கள் தங்கும் அறைகள், உள்ளிட்ட 11 அறைகளும் சிறைச்சாலையும் உள்ளன.