சிவகாசி: சீசன் தொடங்கியதால் சிவகாசியில் கேரள பலாப்பழம் விற்பனை சூடுபிடித்துள்ளது.முக்கனிகளின் பட்டியலில் மாங்கனிக்கு அடுத்ததாக, 2வது இடத்தில் இருப்பது பலாப் பழம். 3வது இடத்தில் உள்ள வாழைப் பழத்துக்கு சீசன் எதுவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால், மாம்பழமும், பலாப் பழமும் குறிப்பிட்ட சீசன் நாட்களில் மட்டுமே கிடைக்கும். இதனால், மா, பலா மீது மக்களுக்கு ஆர்வம் அதிகம். இவற்றில் பலாப்பழம் பலராலும் விரும்பி சாப்பிடப்படும் பழவகையாகும். தற்போது பலாப்பழம் சீசன் துவங்கி விட்டதால் மக்களின் ரசனை பலாப்பழம் மீது விழுந்துள்ளது. பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால், சிவகாசியில் பலாப்பழம் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பண்ருட்டி, கொடைக்கானல், தர்மபுரி மற்றும் கேரளா பகுதிகளில் பலாப்பழம் விளைச்சல் அதிகம் உள்ளது. கேரளா மற்றும் பண்ருட்டி பகுதியில் இருந்து பலாப்பழங்கள் விற்பனைக்காக சிவகாசியில் குவிக்கப்பட்டுள்ளது. கிலோ ரூ.200, ரூ.240 வரை விற்பனை செய்யப்படுகிறது. பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளதால் அதிகளவில் மக்கள் விருப்பத்துடன் பலாப்பழத்தை வாங்கி செல்கின்றனர்.