கன்னியாகுமரியில் சித்ரா பௌர்ணமி ஒரே நேரத்தில் சூரியன் மறைந்து சந்திரன் உதயமான காட்சி

கன்னியாகுமரி: சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரியில் நேற்று மாலை ஒரே நேரத்தில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமான அபூர்வ காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.சித்ரா பவுர்ணமியையொட்டி கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. சித்ரா பவுர்ணமி அன்று மாலை ஒரே நேரத்தில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சியை முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் காணலாம். இந்த அபூர்வ காட்சியை இந்தியாவில் கன்னியாகுமரியிலும் மற்றும் ஆப்பிரிக்காவிலும் தான் காண முடியும்.

இந்த காட்சியை பார்ப்பதற்கு நேற்று தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகை தந்திருந்தனர்.இந்த அரிய காட்சியை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, கன்னியாகுமரி பழத்தோட்டத்தில் உள்ள முருகன்குன்றம் பகுதியில் இருந்தும் கண்டு ரசித்தனர்.  முருகன்குன்றத்தில் நேற்று இரவு நிலாச்சோறு விருந்து நடந்தது. மேலும் கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று மகா சமுத்திர தீப ஆரத்தியும் நடந்தது.

Related Stories: