சென்னையில் இருந்து விளாத்திகுளம் சென்றபோது வேனில் 264 பவுன் நகை கொள்ளை-உளுந்தூர்பேட்டை அருகே மர்மநபர்கள் கைவரிசை?

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே வேனில் இருந்த 264 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த தங்கபெருமாள் மகன்கள் பெரியசாமி(35), ஆனந்தராசு(34). மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர் தங்கள் குடும்பத்தினருடன்  வேனில் சொந்த ஊரான விளாத்திக்குளம், புதூர் நாகலாபுரத்துக்கு சென்றனர். வேனை செங்கல்பட்டு மாவட்டம்  கண்டிகையை சேர்ந்த பாண்டியன்(35) ஓட்டிச் சென்றுள்ளார்.

நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் காந்தி நகர் பகுதியில் சாலை ஓரத்தில் வேனை நிறுத்திவிட்டு டீ சாப்பிட சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது வேனின்  ஒரு பெட்டியில் இருந்த 264 பவுன் நகை மாயமாகியிருந்தது. இதனால் அதில் வந்த பெண்கள் கதறி அழுதனர். இது குறித்து திருநாவலூர் போலீசில் அவர்கள் புகார் கொடுத்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் நகை கொள்ளை குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 திருநாவலூர் போலீசார் புகார் கொடுக்க சென்ற நபர்களிடம் வழியில் வேறு எங்காவது நிறுத்தினீர்களா என கேட்டுள்ளனர். விக்கிரவாண்டி அருகில் நிறுத்தியதாக கூறியதை அடுத்து அங்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளனர். விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது வேனின் மேல் பகுதியில் பெட்டி இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விக்கிரவாண்டிக்கும் உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் காந்தி நகர் சாலை ஓர ஓட்டல் வரை கடைகள் மற்றும் ஓட்டல்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 3 தனிப்படையும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 தனிப்படையும் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories: