பள்ளி, கல்லூரிகளுக்கான கூடைப்பந்து லீக் தொடர்: ஏஐபிஎப் அறிவிப்பு

சென்னை: கூடைப்பந்து விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் மாநில வாரியாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு இடையிலான லீக் போட்டிகள் நடத்தப்படும் என்று   இந்திய கூடைப்பந்து  கூட்டமைப்பு (ஏஐபிஎப்) அறிவித்துள்ளது.

சென்னையில் நேற்று நடந்த செயற்குழு மற்றும் ஆண்டு பொதுக் குழு கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய  கூட்டமைப்பின் தலைவர் கோவிந்தராஜ் கூறியதாவது: இப்போது சென்னையில் நடக்கும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியை தமிழ்நாடு அமைப்பு சிறப்பாக நடத்துகிறது. நாடு முழுவதும் சிறப்பான வசதிகளுடன் போட்டிகளை நடத்துகிறோம். இது வீரர்கள்  உற்சாகத்துடன் முழுத்திறனை வெளிப்படுத்த ஊக்கமளிக்கும்.

இப்போது 3X3 கூடைப்பந்து போட்டி இங்கும் பிரபலமாகி வருகிறது. 2024 ஒலிம்பிக்கில் இந்த பிரிவுக்கு இந்தியா கட்டாயம் தகுதி பெறும். அடுத்து 5X5 பிரிவிலும் தகுதி பெறுவதற்கான பணிகளை தொடங்கி உள்ளோம். இன்றைய கூட்டத்தில் ஐபிஎல் போன்று கூடைப்பந்துக்கான பிரிமீயர் லீக் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் லீக் நடத்துவதை இறுதி செய்வோம். முக்கியமாக பள்ளி, கல்லூரி அளவில் கூடைப்பந்து விளையாட்டை பிரபலப்படுத்த  லீக் போட்டிகள் நடத்த உள்ளோம். அந்த போட்டிகளை சென்னை அல்லது கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். 72வது சீனியர் தேசிய கூடைப்பந்து போட்டி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெறும். இவ்வாறு கோவிந்தராஜ் கூறினார். இந்த சந்தின்போது கூட்டமைப்பு பொதுச் செயலர் சந்தர்முகி சிங், பொருளாளர் ரகோத்தமன், துணைத் தலைவர் ஆதவ் அர்ஜூனா  உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: