மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளர் குண்டாசில் கைது

திண்டுக்கல்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளர் குண்டாசில் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன். இவர், தனது கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதானார். இவருக்கு ஜாமீன் வழங்கிய கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்தது. மேலும், வழக்கு தொடர்பாக ஜோதிமுருகன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடியானது. இதனையடுத்து நேற்று முன்தினம் ஜோதிமுருகன் திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில், நீதிபதி புருஷோத்தமன் முன்பு சரணடைந்தார். அவரை வரும் ஏப்.22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவையிட்டதையடுத்து அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். எஸ்பி சீனிவாசன் பரிந்துரையை ஏற்று கலெக்டர் விசாகன், ஜோதிமுருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து தாடிக்கொம்பு போலீசார், ஜோதிமுருகனை குண்டாசில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: