செர்பியா: செர்பியாவில் நேரிட்ட சுரங்க விபத்தில் சிக்கி, தொழிலாளர்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 18 பேர் காயமடைந்தனர். செர்பியா நாட்டின் சோக்கோபஞ்சா நகருக்கு அருகே செயல்பட்டு வரும் சுரங்கத்தில் 49 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தினுள் மீத்தேன் வாயுவின் அளவு அதிகரித்து, பணியாளர்கள் மூச்சு திணறலில் சிக்கினர். இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சுரங்க விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென்றே அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்த சாதாரண நோயாளிகள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் சுரங்க தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.