கொழும்பு: இலங்கையில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு அவர் பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக 54 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மருந்து, உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், மின்சாரம் இல்லாத காரணத்தால் தினமும் 13 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இரவு முழுவதும் தெரு விளக்குகளும் அணைக்கப்படுகின்றன.
இதனால் ஆத்திரமடைந்து உள்ள மக்கள், போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை முற்றுகையிட்டு, அவர் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர். இதில் வன்முறை வெடித்தது. போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர், வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த தாக்குதலில் 5 போலீசார் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி, போராட்டத்தை கட்டுப்படுத்தினர்.