ஒட்டன்சத்திரம் அருகே பரபரப்பு திமுக ஊராட்சி தலைவரை கார் ஏற்றி கொல்ல முயற்சி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கார் ஏற்றி திமுக ஊராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே அரசப்பிள்ளைபட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சக்திவேல். திமுகவை சேர்ந்தவர். இந்த ஊராட்சியில், அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தன. ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களை மீட்க ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாசில்தார் தலைமையில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.நேற்று முன்தினம் இரவு ஒட்டன்சத்திரம் - பழநி சாலையில் பெட்ரோல் பங்க் அருகே ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், ஒட்டன்சத்திரம் நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார், டூவீலர் மீது மோதியது. இதில் சக்திவேல் தூக்கி வீசப்பட்டார்.படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். காரை ஏற்றி திமுக ஊராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: