கோடை விடுமுறையால் செல்போனில் மூழ்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்

*பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாட அறிவுரை

வேலூர் : கோடை விடுமுறையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்போனில் மூழ்கி இருப்பதால் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
நாடு வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பம் மிகவும் அவசியமாகிறது. அதில் பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் இருக்க தான் செய்கிறது. கொரேனா காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

இருப்பினும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்தப்பட்டது. இதற்காக பள்ளி குழந்தைகளுக்கு பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்தனர். அதன்பின்னர் கொரோனாவின் தீவிரம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் இந்த கொரோனா நோயத் தொற்றுக்கு பிறகு சிறு வயது குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. மேலும் தற்போது தமிழகத்தில் கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் செல்போனில் நீண்ட நேரம் மூழ்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நீண்ட நேரம் போனை பார்ப்பதால் கண் குறைபாடு, ஞாபக மறதி, கவனச்சிதறல், படிப்பு மந்தம் உள்ளிட்ட பிரசனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக சில மாணவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளத்தை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். முன்பின் தெரியாத நபர்கள் ஆசை வார்த்தை கூறி பணம் பறிக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. சமூக வலைத்தளங்கள் மூலமாக ஏராளமான குற்றச்செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே இதைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாட்டின் கிராமப்புற பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பம், தாயக்கட்டை, பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், பாம்பும் ஏணியும், பம்பரம், சதுரங்கம், மூன்றுகால் ஆட்டம், உப்பு மூட்டை தூக்கல், கோலி, கில்லி, நொண்டி ஆட்டம் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டுகளை ஆடலாம். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் இதையெல்லாம் மறந்து விட்டனர். பாரம்பரிய விளையாட்டுகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையிலும், மேலும் செல்போனில் மூழ்கியுள்ள குழந்தைகளை மீட்கவும், இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெற்றோர்கள் சொல்லி கொடுக்க வேண்டும்.

மேலும் புத்தக வசாசிப்பு, இசை, உடற்பயிற்சி, யோகா, ஓவியம், நடனம், நீச்சல் ஆகிய ஆக்கப்பூர்வமான செயலில் தங்களுடைய குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும். செல்போன் மற்றும் நவீன தொழில்நுட்பம் அவசியமானுது அவற்றை முழுவதுமாக ஒதுக்க முடியாது. ஆனால் அவற்றை அளவோடு பயன்படுத்த வேண்டும் என்பதை தங்களது குழந்தைகளுக்கு புரியும் வகையில் பெற்றோர்கள் சொல்லவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post கோடை விடுமுறையால் செல்போனில் மூழ்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: