தெலுங்கு, கன்னட மொழி உடன்பிறப்புகள் அனைவருக்கும் உகாதி வாழ்த்துக்கள்: தமிழ்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் வாழும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழ்நாட்டிலும் அண்டை மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி உடன்பிறப்புகள் அனைவருக்கும் உகாதி வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள உகாதி புத்தாண்டு திருநாள் வாழ்த்துச் செய்தி: அறுசுவை பச்சடி, மாவிலை தோரணம், புத்தாடையுடன் உகாதி புத்தாண்டு திருநாளை இன்று சிறப்புடன் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் மொழிச் சிறுபான்மையினர் நலனில் திமுக அரசு என்றுமே அக்கறையோடு செயல்பட்டு வந்துள்ளது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உகாதி திருநாளில் அரசு விடுமுறை அறிவித்தவர் கலைஞர்.

வரலாற்று ரீதியாகவே விந்திய மலைத்தொடருக்கு தெற்கே வாழும் திராவிட மக்கள் தமக்குள் ஏராளமான பண்பாட்டு கூறுகளில் ஒற்றுமைகளை கொண்டுள்ளனர். ஒரே மொழிக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக விளங்குகின்றனர். இந்த தொடர்ச்சி என்றும் நீடிக்க வேண்டும். நமக்கிடையேயான உறவு வலுப்பட வேண்டும். நமது பண்பாட்டையும் மொழியையும் காக்க ஒன்றிணைந்து நிற்பது வரலாற்று தேவை என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். வேற்றுமைகள் கடந்து, நம்மிடையேயான உறவை போற்றும் திருநாளாக இந்த உகாதி திருநாள் அமைந்திட தமிழ்நாட்டிலும் அண்டை மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

Related Stories: