வேதாரண்யம்: கோடியக்கரை அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி வலைகள், செல்போனை பறித்து சென்றனர். தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினத்திலிருந்து பைபர் படகில் சதீஷ் (30), ஆறுமுகம் (30), தமிழ்செல்வன் (31) ஆகிய 3 மீனவர்கள், நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்றுமுன்தினம் மதியம் மீன்பிடிக்க சென்றனர். அப்போது நள்ளிரவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 20 பேர், தமிழக மீனவர்கள் 3 பேரையும் தாக்கியதோடு பூட்ஸ் காலால் எட்டி உதைத்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வலைகளையும் சேதப்படுத்தினர். பின்னர் படகில் இருந்த செல்போன், லைட், மற்றும் மீன்பிடி பொருட்களை பறித்து சென்றனர்.