கமுதி பங்குனி பொங்கல் விழாவில்: உடல் முழுக்க சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்

கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில், உடல் முழுவதும் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நேற்று அதிகாலையில் இருந்து பக்தர்கள் பலர் தங்களது உடல் முழுவதும் சேறு பூசிக் கொண்டு, கையில் வேப்பிலையுடன் கோயிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை செய்வதன் மூலம் உடலில் உள்ள சரும நோய்கள் குணமாகும் என்று பக்தர்கள் தெரிவித்தனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி, பூப்பெட்டி பால்குடம், 101 சட்டி, 51 சட்டி, வேல் குத்துதல் மற்றும் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.

Related Stories: