தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அனுஷ்கா சர்மா விலகல்

மும்பை: தனது தயாரிப்பு நிறுவனத்திலிருந்து நடிகை அனுஷ்கா சர்மா விலகி யுள்ளார்.இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து மணந்த அனுஷ்கா சர்மா, சமீபத்தில் அம்மா ஆனார். இந்நிலையில் அவர் தனது பட நிறுவனத்திலிருந்து விலகுவது பற்றி இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது:எனது சகோதரர் கர்னேஷுடன் சேர்ந்து பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். படங்கள், வெப்சீரிஸ்கள் தயாரித்தோம். மேலும் சில படங்களை தயாரித்து வருகிறோம். இந்த நிறுவனத்தை நடத்தும்போது சந்தித்த இடையூறுகளை நினைத்து பெருமைப்படுகிறேன்.

காரணம், பல நிர்ப்பந்தங்களை சந்தித்தும் இதிலிருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. இப்போது குழந்தை வளர்ப்பு என்ற முக்கியமான கட்டத்துக்கு நான் வந்துள்ளேன். இதனால் எனது முதல் முக்கியத்துவமான நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் தர விரும்புகிறேன். குழந்தையை சரியான முறையில் பராமரித்த பிறகு நடிப்பில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன். அதனால் பட நிறுவனத்திலிருந்து விலகுவது என முடிவு செய்துள்ளேன். இந்த நிறுவனத்தை கர்னேஷ் இனி முழுமையாக கவனித்துக்கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: