கீவ் : நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ராணுவம், தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி உள்ளிட்ட நகரங்களில் 26வது நாளாக தொடர்ந்து நேற்றும் தாக்குதலை நடத்தியது. மரியுபோல் நகரம் இப்போரில் மிகக்கடுமையாக உருக்குலைந்துள்ளது. இங்கு சுமார் 4 லட்சம் மக்கள் உயிர் தப்பிக்க தினம் தினம் செத்துப் பிழைக்கின்றனர். இங்குள்ள பொதுமக்கள் அடைக்கலாம் அடைந்துள்ள தியேட்டர், பள்ளி மீது ரஷ்யா குண்டுவீசி தாக்கி உள்ளது. இக்கட்டிடங்களின் அடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.