திருவண்ணாமலை : ஜவ்வாதுமலைப் பகுதியில் எஸ்பி தலைமையில் நடந்த சோதனையில், 2,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டது. மேலும் 5 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஜவ்வாதுமலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை எஸ்பி பவன்குமார் தலைமையில், ஏஎஸ்பி கிரண்சுருதி, போளூர் டிஎஸ்பி குணசேகரன், கலால் டிஎஸ்பி ராஜன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி ஆர்.ரமேஷ் ஆகியோர் உள்ளிட்ட போலீஸ் படையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, ஜவ்வாதுமலைப் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த தேடுதல் வேட்டையில், நம்மியம்பட்டு மலைப்பகுதியில் 1,600 லிட்டர் கள்ளச்சாராய ஊறலும், பால்வாடி பகுதியில் 600 லிட்டர் கள்ளச்சாராய ஊறலும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.