சேலம் அருகே யூடியூப் பார்த்து ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: சிசிடிவி காட்சியால் வாலிபர் சிக்கினார்

சேலம்: சேலத்தை அடுத்த மல்லூர் நிலவாரப்பட்டி கிராமத்தில், தனியார் வங்கி ஏடிஎம் உள்ளது. கடந்த 16ம் தேதி இரவு 1 மணிக்கு மர்மநபர், அந்த ஏடிஎம் மெஷினை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார். அப்போது ஏடிஎம் மையத்தில் இருந்து அலாரம் அடித்தது. இதனால் அந்த நபர், தப்பியோடினார். அப்போது, வங்கியின் மேலாளர் செல்போனுக்கு அலாரம் மெசேஜ் சென்றுள்ளது. இதனால் அவர், உடனே மல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.  போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, ஏடிஎம் இயந்திரத்தின் முன்பகுதி உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து, ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், ஏடிஎம் மெஷினை உடைத்த நபரின் உருவம் பதிவாகியிருந்தது. அதனைக்கொண்டு தனிப்படை போலீசார் விசாரித்ததில், பனமரத்துப்பட்டி அருகே பெரமனூரை சேர்ந்த மகேந்திரன் மகன் விஜயகுமார்(20), இக்கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை உறுதி செய்து அவரை நேற்று கைது செய்தனர். சேலத்தில் உள்ள நகைக்கடையில் வேலை பார்க்கும் அவர், செல்போன் யூடியூப்பில், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிப்பது எப்படி? என பார்த்து தெரிந்து கொண்டதாகவும், பிறகு அதன்படி முயற்சி செய்தபோது, அலாரம் அடித்ததால் தப்பிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

Related Stories: