இன்று ஐஎஸ்எல் கால்பந்து பைனல்: புதிய சாம்பியன் பட்டம் யாருக்கு?

பதோர்தா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் புதிய சாம்பியன் யார்? என்பதை முடிவு செய்யும் பைனலில் ஐதராபாத் - கேரளா  அணிகள் இன்று மோதுகின்றன. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 8வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த ஜாம்ஷெட்பூர், ஐதராபாத், மோகன் பகான், கேரளா அணிகள் அரையிறுதியில் மல்லுக்கட்டின. பரபரப்பான 2 கட்ட அரையிறுதியில், மொத்த கோல் எண்ணிக்கை அடிப்படையில் வெற்றியை ருசித்த ஐதராபாத், கேரளா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பைனல் பதோர்தாவில் இன்று இரவு நடக்கிறது. தற்போது கொரோனா தாக்கம்  குறைந்துள்ளதால், இப்போட்டியைக் காண 100 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

2019ல் அறிமுகமான ஐதராபாத், முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது. நடப்புத் தொடரில் அதிக  கோல் அடித்த அணி என்பதால் ஐதராபாத்  கூடுதல் உற்சாகத்துடன் இருக்கிறது. கேரளா பைனலுக்கு முன்னேறுவது இது 3வது முறையாகும். 2014, 2016ல் பைனலில் விளையாடிய அந்த அணியால் 2வது இடத்தைத் தான் பிடிக்க முடிந்தது. அந்த சோக வரலாற்றை மாற்றி எழுதும் வேகத்துடன்  கேரளா இன்று களம் காண்கிறது. ஐஎஸ்எல்  வரலாற்றில் 2வது முறையாக பைனலில் தென் மாநில அணிகள் மோதுகின்றன.  

நேருக்கு நேர்...

* இரு அணிகளும் இதுவரை மோதிய 6 ஆட்டங்களில் 3-3 என சமநிலை வகிக்கின்றன. இந்த  ஆட்டங்களில் கேரளா 10 கோல், ஐதராபாத் 9 கோல் அடித்துள்ளன.

* நடப்பு  தொடரில் இரு அணிகளும் மோதிய 2 ஆட்டங்களிலும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. ஜன.9ல் நடந்த முதல் ஆட்டத்தில் கேரளா 1-0 என்ற  கோல் கணக்கிலும், பிப்.23ல் நடந்த 2வது ஆட்டத்தில் ஐதராபாத் 2-1 என்ற  கோல் கணக்கிலும் வென்றன.

Related Stories: